தேனியில் ஏடிஎம்மில் பணம் செலுத்த உதவுவதாகக் கூறி சுமார் 50 ஆயிரம் ரூபாய் மோசடி செய்த பட்டதாரி இளம்பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர்.
நாகராஜ் என்பவர் கடந்த 25 ஆம் தேதி பணம் செலுத்துவதற்காக பெரியகுளம் சாலையில் உள்ள எஸ்.பி.ஐ வங்கிக்கு சென்றுள்ளார். கூட்டம் அதிகமாக இருக்கவே அருகிலிருந்த ஏ.டி.எம் இயந்திரம் வாயிலாக செலுத்த சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த இளம் பெண் ஒருவர் நாகராஜ்-க்கு உதவுவதாக கூறி, 50 ஆயிரம் ரூபாய் பணத்தை வாங்கியுள்ளார். அதில் ஒரு தாளை மட்டும் இயந்திரம் எடுத்துக் கொள்ளவில்லை எனவும், மீதி பணத்தை செலுத்தி விட்டதாகவும் கூறியுள்ளார்.
அதனை நம்பிச் சென்ற நாகராஜ், பின்னர் சோதித்த போது வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்படாததால் அதிர்ச்சி அடைந்தார். பிறகு அவர் அளித்த புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது அந்தப் பெண் மோசடி செய்து பணத்தை கொண்டு சென்றது தெரியவந்தது. பின்னர் அப்பெண்ணை கைது செய்த காவல்துறையினர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பெண்ணின் பெயர் மணிமேகலை என்பதும், இளங்கலை கணினி அறிவியல் பட்டதாரியான அவர் பல இடங்களில் கைவரிசை காட்டியதும் தெரியவந்துள்ளது.