தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்க பரிந்துரை என தகவல் வெளியாகி உள்ள நிலையில்,இந்தியர்கள் என்ன பரிசோதனை எலிகளா? என்று சுப்பிரமணியன் சுவாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி தயாரிப்பு பணிகள் இறுதி கட்டத்தில் உள்ள நிலையில், இந்தாண்டு தொடக்கத்தில் தடுப்பூசி ஒத்திகை செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.
அதன்படி,இன்று நாடு முழுவதும் தடுப்பூசி ஒத்திகை நடைபெற்று வருகிறது. இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம் ,சீரம் நிறுவனம் , ஃபைசர் நிறுவனங்கள் தடுப்பூசி தயாரித்து உள்ளன.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் -அஸ்ட்ராஜென்கா நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவின் சீரம் நிறுவனம் கோவிஷீல்டு தடுப்பூசியை தயாரித்து வருகின்றன.
இதனிடையே அவசர கால பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்குமாறு 3 நிறுவனங்கள் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தது.
ஆகவே இந்தியாவில் கோவிஷீல்டு கொரோனா தடுப்பு மருந்துக்கு ஒப்புதல் தர மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் கூறப்படுகிறது.
இந்தியாவில் கொரோனா அவசர கால பயன்பாட்டிற்கு தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்க பரிந்துரை என தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,உலக சுகாதார நிறுவனமே பரிந்துரைக்காத நிலையில், அஸ்ட்ராஜென்கா தடுப்பூசி இந்தியாவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.
இந்தியர்களை ”கினி எலிகள்” போல சோதனைக்கு உட்படுத்தப் போகிறார்களா என்று சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.