மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயம் சிறப்புகள் பற்றிய ஓர் பதிவு!
கயிலையே மயிலை; மயிலையே கயிலை’ என்று இந்தத் தலத் தைப் போற்றுகின்றன புராணங்கள்.
அம்பிகை மயிலாக வந்து வழிபட்ட தலம் ஆதலால், இவ்வூர் மயிலை என்று பெயர் பெற்றது.
அம்பிகை கற்பகவல்லி எனும் திருப்பெயருடன் அருள்கிறாள்.
‘கற்பகம்’ என்பதற்கு வேண்டும் வரம் தருபவள் என்று பொருள்.
இவளைத் தரிசித்துவிட்டே ஸ்வாமியைத் தரிசிக்கும்படியான அமைப்பு, இக்கோயிலின் சிறப்பம்சம்.
சைவ சித்தாந்தங்களும் சக்தியின் மூலமாகவே சிவத்தை அடையமுடியும் என்கின்றன.
அதற்கு உகந்த முறையில் திகழ்கிறது கபாலீஸ்வரர் ஆலயம்.
இங்கு வந்து அம்பாளைப் பிரார்த்தித்தால், நினைத்தது நிறைவேறும்; எண்ணிய காரியங்கள் யாவும் ஈடேறும்.
ஏழு என்ற எண்ணை அடிப் படையாகக் கொண்ட விஷயங்கள் மயிலையின் தனிச்சிறப்பு.
கபாலீஸ்வரர், வெள்ளீஸ்வரர், காரணீஸ்வரர், மல்லீஸ்வரர், விருபாக்ஷீஸ்வரர், வாலீஸ்வரர், தீர்த்த பாலீஸ்வரர் ஆகிய மயிலையில் உள்ள ஏழு சிவாலயங்களையும் ஒரே நாளில் தரிசித்தால் எல்லாப் பேறுகளும் கிடைக்கும்.
அதேபோல் மயிலாப்பூரில் ஏழு தீர்த்தங்களும் சிறப்புடன் திகழ் கின்றன.
அவை: கபாலி தீர்த்தம், வேத தீர்த்தம், வாலி தீர்த்தம், கங்கை தீர்த்தம், வெள்ளி தீர்த்தம், கடவுள் தீர்த்தம் (கடல்), ராம தீர்த்தம்.
சிக்கல் திருத்தலத்தில் சக்தி வேல் பெற்ற முருகப் பெருமான், மயிலைக்கும் வந்து வழிபட்டு சிங்கார வேல் ஒன்றைப் பெற்றாராம். எனவே, இங்குள்ள முருகனுக்கு சிங்கார வேலன் என்று பெயர்.
இவ்வாறு தன்னை வணங்கிய முருகப்பெருமானிடம், ‘அண்ணன் விநாயகனையும் வணங்கு!’ என்று பணித்தார் ஈசன்.
அதன்படியே இங்குள்ள கணபதியையும் வணங்கி வழிபட்டார் கந்தவேள்.
இதனால் மகிழ்ந்த விநாயகர் ஆனந்தக் கூத்தாடினார். இவரே இங்கு நர்த்தன விநாயகராகக் காட்சி தருகிறார்.
ஈஸ்வரனுக்கு ஒப்பாக தனக்கும் ஐந்து தலைகள் என்று கர்வம் கொண்ட பிரம்மனின் ஒரு சிரத்தைக் கொய்து, அந்தக் கபாலத்தை கையில் ஏந்தியதால், கபாலீஸ்வரர் எனும் திருப்பெயருடன் சிவனார் அருளும் மிக உன்னதமான திருத்தலம் இது.
இங்கு ஸ்வாமி மேற்கு நோக்கி அருள்வது கூடுதல் விசேஷம்.
இந்தத் தலத்தின் சிறப்புக்குச் சிறப்பு சேர்ப்பது பங்குனிப் பெருவிழாவும், அதிலும் பிரதானமான அறுபத்து மூவர் திருவிழாவுமே!
பங்குனிப் பெருவிழாவின் பத்தாம் நாள் காலை விழாவில், கபாலீஸ்வரர் தீர்த்தவாரி நடைபெறும்.
பிறகு, அம்பாள் மயில் உருவில் புன்னை மரத்தின் அடியில் இருக்கும் பெருமானை வழிபடுவார்.
பௌர்ணமி தினம் இரவு மயில் உருவம் நீங்கி சிவபெருமானைக் கரம் பிடிப்பாள் அம்பிகை.
கல்யாணத் தடைகளால் வருந்தும் அன்பர்கள், இந்த வைபவத்தைத் தரிசித்து ஸ்வாமியையும் அம்பாளையும் வழிபட்டு வர, விரைவில் தடைகள் யாவும் நீங்கி கல்யாணம் கைகூடும் என்பது சிறப்பு.
கற்பகாம்பாள் சன்னதிக்குப் போகும் முன், நந்தியின் இடது புறத்தில் உள்ள சுவற்றில், திருவெம்பாவை எழுதி இருப்பதைப் பார்க்கலாம், அதே சுவற்றில், கீழ்கண்ட வாசகம் எழுதி இருக்கும்.
மாணிக்க வாசகர் அருளிய பொன் மொழிகள்:
“உடையாள் உந்தன் நடுவிருக்கும்
உடையாள் நடுவில் நீ இருத்தி
இரு நீரும் அடியார் நடுவில் இருப்பீர். அதனால்
அடியேன், அடியார் நடுவில் இருக்கும் அருளைத் தருவீர், முடியே முதல....”
இதற்கு என்ன அர்த்தம் என்று யோசித்திருக்க்கிறோமோ ?
இதன் அர்த்தம்:
மாணிக்கவாசகரைப் பார்த்து, சிவபெருமான், கேட்கிறார்.
சிவபெருமான்:மாணிக்கவாசகரே, கைலாசத்துக்கு வருகிறீர்களா ?
மாணிக்கவாசகர்:வரமாட்டேன் !!
சிவபெருமான்:(அதிர்ச்சியுடன்)), என்னது வரமாட்டீரா !!!. அவன் அவன் கைலாசம் கைலாசம் என்று அலைகிறான். நீர் என்னவென்றால் வரமாட்டேன் என்கிறீரே ?
மாணிக்கவாசகர்: கைலாசத்தில் என்ன இருக்கிறது ?
சிவபெருமான்:கைலாசத்தில், நான் இருக்கிறேன்.
மாணிக்கவாசகர்:பிறகு
சிவபெருமான்:உமையம்மை இருக்கிறாள்
மாணிக்கவாசகர்:பிறகு
சிவபெருமான்:கந்த வேள் இருக்கிறார்
மாணிக்கவாசகர்:பிறகு
சிவபெருமான்:பிறகு என்ன வேண்டும் மாணிக்கவாசகரே ?
மாணிக்கவாசகர்:அடியவர் உண்டா ?
சிவபெருமான்:அடியவர் கைலாசத்தில் இல்லை
மாணிக்கவாசகர்:அப்படியென்றால் நான் அங்கே வரவில்லை !
சிவபெருமான்(ஆச்சர்யத்துடன் ):– என்னிடம் இல்லாதது அடியவரிடம் என்ன இருக்கிறது ?
மாணிக்கவாசகர்:சுவாமி. நீங்கள் இருக்கிறீர்கள், உங்கள் உடம்பில் உமையவள் இருக்கிறாள், நீங்கள் இருவரும், அடியவர் மனதில் இருக்கிறீர்கள். அதனால், நான், அடியவரிடம் இருந்து விட்டால், உங்களோடும், உமையோடும் இருந்த பலன் எனக்குக் கிடைக்கும் அல்லவா !!. அதனால் பூலோகத்தில் என்னை விட்டு விடவேண்டும்.
இப்போது மீண்டும் மேலே உள்ள கவிதையைப் படிக்கவும்
என்ன அழகான வரிகள்!என்ன ஒரு அம்சமான அர்த்தம்!!
மாணிக்கவாசகர், கற்பகம்பாளை, அர்த்தஜாமத்தில்,சயன அறைக்கு அனுப்பும் போது, உத்தர கோச மங்கை என்று சொல்லி, பொன்னூஞ்சலில் கபாலியுடன் உட்கார வைத்து ஆட்டுகிறார். இது ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய காட்சி.
சயன அறைக்கு மேலே பார்த்தால், கபாலியும், கற்பகம்பாளும் உட்கார்ந்து கொண்டு இருக்க, அவருக்கு எதிரே, ஆஞ்சநேயர் நின்று கொண்டிருக்கும் காட்சி,
இது மிக மிக அரிய காணக்கிடைக்காத காட்சி!!
இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது உண்மை செய்திகள் குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.
நன்றி.
ஓம் நமசிவாய
மோகனா செல்வராஜ்