படித்த பள்ளிக்கு - சொத்தை நன்கொடையாக வழங்கிய முன்னாள் மாணவர்

 படித்த பள்ளிக்கு ரூ.2 கோடி சொத்தை நன்கொடையாக வழங்கிய முன்னாள் மாணவர்



தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பள்ளியில் படிக்கும் ஏழை மாணவியருக்கு உதவும் வகையில், இப்பள்ளியின் முன்னாள் மாணவர் ஒருவர் தூத்துக்குடியில் தனக்குள்ள ரூ.2 கோடி மதிப்பிலான சொத்தை பள்ளிக்கு நன்கொடையாக வங்கியுள்ளார். இந்த சொத்து மூலம் பள்ளிக்கு மாதம் ரூ.58 ஆயிரம் வருமானம் கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக பள்ளியின் செயலாளர் எம்.முரளி கணேசன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது, ''தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பள்ளியில், விரும்பும் பழைய மாணவர்களிடம் இருந்து நிதி உதவி பெற்று ஏழை மாணவியருக்கு பள்ளிக் கட்டணம் செலுத்தும் திட்டம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. 

கொரோனா காலத்தில் பொருளாதாரத்தில் பாதிக்கப்பட்ட 201 மாணவியரின் பெற்றோருக்கு தலா ரூ.1000 வீதம் ரூ.2,01,000 உதவித் தொகை பள்ளி நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டுள்ளது. ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்ட நேரத்தில் செல்போன் வசதி இல்லாத 20 மாணவியருக்கு ரூ.1 லட்சம் செலவில் செல்போன்கள் வாங்கிக் கொடுக்கப்பட்டன. 



இவ்வாறு பல்வேறு பணிகள் நடைபெற்று வரும் வேளையில், இதனை ஊக்கப்படுத்தும் விதமாக முன்னாள் மாணவர் ஒருவர் தனது ரூ.2 கோடி மதிப்பிலான சொத்தை ஏழை மாணவியரின் படிப்புக்காக நன்கொடையாக வழங்கியுள்ளார். 

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஐடி நிறுவனம் ஒன்றில் மூத்த இயக்குநராக பணியாற்றும் அந்த நபர், சுப்பையா வித்யாலயம் தொடக்கப் பள்ளியில் 1973 முதல் 1978 வரை 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படித்துள்ளார். 

அவர், 5 வீடுகளை கொண்ட ரூ.2 கோடி மதிப்பிலான சொத்தை முழுமையாக நன்கொடையாக வழங்கியுள்ளார். இதன் மூலம் மாதம் ரூ.58 ஆயிரம் வாடகை வருமானம் பள்ளிக்கு கிடைக்கும். இந்த தொகை ஏழை மாணவியரின் கல்விக்காக பயன்படுத்தப்படும்.

அந்த நபர் தனது பெயர், விபரம் எதையும் வெளியிட வேண்டாம் என கேட்டுக் கொண்டதால் அவரை பற்றிய மேலும் விபரங்களை தெரிவிக்க இயலவில்லை. 

அவருக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.  இந்த தொகை முழுக்க முழுக்க ஏழை மாணவியரின் கல்விக்காக பயன்படுத்தப்படும் என்றார் அவர்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அ.ஞானகவுரி பேசும்போது, தான் படித்த பள்ளிக்கு ரூ.2 கோடி சொத்தை கொடுப்பது என்பது எளிதான காரியம் அல்ல. 

அதுவும் தனது பெயர் கூட வெளியே தெரியக்கூடாது என நினைக்கும் அந்த நபரின் செயல் மிகவும் பாராட்டுக்குரியது. 

இதுபோல பலரும் தாங்கள் படித்த பள்ளிக்கு ஏதாவது வகையில் உதவி செய்ய முன்வர வேண்டும்.

மேலும், இந்த உதவித் தொகை மூலம் பயன்பெறும் மாணவியரும் எதிர்காலத்தில் நல்ல நிலையை அடைந்து, அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஒரு பகுதியை இதுபோல சமுதாயத்துக்கு வழங்க முன்வர வேண்டும் என கேட்டுக் கொண்டார். 

பள்ளி தலைமை ஆசிரியர் எஸ்.எம்.சாந்தினி கவுசல், உதவி தலைமை ஆசிரியர் ஆர்.விபாஸ்ரீ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.