மும்பை : சர்வதேச விமான சேவைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை, அடுத்த மாத இறுதி வரைநீட்டிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, மார்ச்சில், ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. அதன்படி, அனைத்து விமான சேவைகளும், மார்ச், 23 லிருந்து நிறுத்தி வைக்கப்பட்டன.
பின், வைரஸ் பாதிப்புகள் குறைந்ததை தொடர்ந்து, மே மாதம், உள்நாட்டு பயணியர் விமான சேவைகள் மட்டும் துவங்கப்பட்டன.
வெளிநாடுகளில், கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், சர்வதேச விமானங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை, தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அந்த தடை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, டி.ஜி.சி.ஏ., எனப்படும், விமான போக்குவரத்து பொது இயக்குனரகம், வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
சர்வதேச விமான சேவைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை, வரும் டிச., 31ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.
எனினும், இந்த தடை, சர்வதேச சரக்கு விமானங்களுக்கும், ஒப்புதலுடன் குறிப்பிட்ட சில வழித்தடங்களில் இயங்கும் விமானங்களுக்கும் பொருந்தாது. 'வந்தே பாரத்' திட்டத்தின் கீழ் இயக்கப்படும் விமானங்கள் மற்றும் ஒப்பந்தம் அடிப்படையில், வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் விமானங்களின் சேவைகள் தொடர்ந்து நீடிக்கும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.