சமையல் குறிப்பு

 



சமையல் கலை என்பது மிகப்பெரிய வரமாக பார்க்கப்படுகிறது. உழைத்து சம்பாதிப்பது எல்லாமே ஒரு ஜான் வயிற்றுக்கு தான். இப்போது இருக்கும் கலப்பட உலகில் கண்டதையும் சாப்பிட்டு ஆயுளை குறைத்து கொள்வதை விட ஆரோக்கியமான நல்ல உணவு வகைகளை சமைத்து சாப்பிட்டால் உடல் பலம் மற்றும் மனோ பலம் இரண்டுமே கூடும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

 

இத்தகைய சமையல் கலையில் சில நுண்ணிய விஷயங்கள் இதுநாள் வரை நமக்குத் தெரியாமல் கூட இருந்திருக்கலாம். அவைகள் தெரிந்து கொள்வதன் மூலம் நம்மை நாமே மேலும் மெருகேற்றிக் கொள்ள முடியும்.

1) வாணலியில் வறுப்பதற்காக, முட்டையை உடைத்து ஊற்றும்போது, முட்டை அங்கும் இங்கும் சிதறி விடுகிறது. இதைத் தவிர்க்க, வாணலியில் சிறிதளவு எலுமிச்சை பழச்சாற்றை ஊற்றிப் பரப்பிய பிறகு, முட்டையை உடைத்து ஊற்றினால், முட்டை ஒன்றி இருக்கும்.


2)ஆற்று மீனின் சேற்று வாடை போக வேண்டும் என்றால் மீனை உப்புப் போட்ட தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.


3)காபி மேக்கரில் சீரகத்தைப் போட்டு, வெந்நீரை ஊற்றுங்கள். சில நிமிடங்களில் அருமையான சீரகத் தண்ணீர் தயார்! சீரகத்தை வடிகட்ட வேண்டியதும் இல்லை. வயிற்றுப் பிரச்சனைக்கும் பலன் கொடுக்கும்.


4)ஹெல்த்தியான சப்பாத்தி செய்ய, கோதுமை மாவுடன், நான்கில் ஒரு பங்கு சத்து மாவு, ஒரு டீஸ்பு ன் வெந்தயப்பொடி கலந்து கொள்ளுங்கள். இதில் சிறிது வெந்தயக்கீரையை வதக்கியும் சேர்க்கலாம். சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றது இந்த சப்பாத்தி.


5)சமைப்பதற்கு முன் உலர்த்திய மீனை நன்றாக கழுவி சில மணி நேரம் குளிர்ந்த தண்ணீரில் ஊற வைக்கவும்.


6)பிரெட்டை ஸ்வீட் அயிட்டமாக மாற்ற ஒரு ஐடியா. ஒரு டம்ளர் பாலில் மூன்று (அ) நான்கு டீஸ்பு ன் மைதா, சர்க்கரை, சிறிது ஏலக்காய்தூள் சேர்த்துக் கரைத்துக் கொள்ளவும். அதில் பிரெட்டை நனைத்து தோசைக்கல்லில் போட்டு எண்ணெய் விட்டு, தீயைக் குறைத்து இரு பக்கமும் பொன்னிறமாக சுட்டு எடுக்கவும். பிரெட் மொறுமொறுப்புடன் சுவையாகவும் இருக்கும்.


 7)எலுமிச்சைப் பழச்சாற்றை ஊற்றி கை மற்றும் கத்தியைக் கழுவினால் நாற்றம் போய்விடும்.


8) கடினமான வேகாத கறியை எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து ஊற வைத்தால் மிருதுவாகிவிடும்.


9) முட்டை நீண்ட நாட்கள் கெடாமல் இருக்க, எலுமிச்சை பழச்சாறு கலந்த தண்ணீரில் போட்டு வைக்க வேண்டும். 


10)மிளகாய் வற்றலை நீங்கள் வறுக்கும் பொழுது ஒருவிதமான நெடி அறை முழுவதும் பரவி இருக்கும். இதனால் இருமல், எரிச்சல் போன்றவை ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. மிளகாய் வற்றலில் இருக்கும் காம்புகளை நீக்கி விட்டு பின்பு வறுத்தால் நெடி அடிக்காமல் கமறாமல் இருக்கும்.


11) நீங்கள் அடைக்கு மாவு தயாரித்து வைத்திருந்தால்! அந்த மாவு அதிகம் புளித்து விட்டால் என்ன செய்வது? என்று கவலைப்படத் தேவையில்லை. இட்லி சட்டியில் இட்லி போல் ஊற்றி அவித்து எடுத்து பின்பு உதிர்த்து கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, மஞ்சள் தூள், வெங்காயம் ஆகியவற்றை தாளித்தம் செய்து தேவைக்கேற்ப உப்பு சேர்த்து பிரட்டி விட்டால் போதும். அட்டகாசமான சுவையில் அடை காரப்புட்டு தயாராகிவிடும்.

 

12)எப்போதும் வெரைட்டி ரைஸ் எனப்படும் கலந்த சாதம் தயாரிக்கும் பொழுது அதில் சேர்க்கப்படும் இஞ்சி, பச்சை மிளகாய் போன்றவற்றை யாரும் சாப்பிட மாட்டார்கள். வீணாக  எறிந்து விடுவார்கள். அதனால் இந்த ட்ரிக்ஸை பயன்படுத்தி பாருங்கள். இஞ்சி, பச்சை மிளகாயை மட்டும் சின்ன ஜாரில் திருகி தாளிக்கும் பொழுது வதக்கி விட்டு செய்தால் சுவை அதிகமாவதுடன் வீணாகவும் செய்யாது.

 

13)மணத்தக்காளி கீரை வயிற்றுப் புண்ணை ஆற்றும். இதன் கசப்புத் தன்மை காரணமாக தவிர்த்து விடுகிறார்கள். மணத்தக்காளிக் கீரையுடன் பருப்பு சேர்த்து, உப்பு, புளி, மிளகாய் தேவையான அளவுக்கு வைத்து துவையலாக அரைத்து கொடுத்தால் சூப்பர் சுவையுடன் வித்தியாசமாக இருக்கும்.

 

இந்த குறிப்புகளும் நிச்சயம் அனைவருக்கும் உபயோகமாக இருக்கும்.


இதுபோன்ற பல பயனுள்ள  தகவல்களுடன் மேலும் நமது  உண்மை   செய்திகள்  குழுவின் சமையல்  பயணம் தொடரும்.


வணக்கம் அன்புடன் கார்த்திகா