திருமலையில் தமிழக முதல்வரை வரவேற்ற காவல் உதவி ஆய்வாளர்: திருப்பதி தேவஸ்தானத்தின் அலட்சியப்போக்கு


திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய திருமலைக்கு 16.11.2020 வந்த தமிழக முதல்வர் பழனிசாமியை உயரதிகாரிக்கு பதிலாககாவல் உதவி ஆய்வாளர் வரவேற்ற நிகழ்வு பெரும் விவாதப்பொருளாக மாறியுள்ளது.


தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய திருமலைக்கு வந்தார். இவரை திருமலை உதவிக் காவல் ஆய்வாளர் முனுசாமி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.


பின்னர் இரவு திருமலையில் தங்கிய முதல்வர் பழனிசாமி, 17.11.2020 காலை சுவாமியை தரிசிக்க திட்டமிட்டுள்ளார். வழக்கமாக மாநில முதல்வர்கள், ஆளுநர்கள், உச்ச மன்ற நீதிபதிகள் போன்றோர் திருமலைக்கு வந்தால் அவர்களை தேவஸ்தான உயர் நிர்வாக அதிகாரி அல்லது கூடுதல் நிர்வாக அதிகாரி அல்லது இணை நிர்வாக அதிகாரி ஆகியோர் வரவேற்பதே வழக்கம்.


கடந்த மாதம் திருமலைக்கு வந்த கர்நாடக முதல்வர் எடியூரப்பாவை தேவஸ்தான அறங்காவலர் குழுத் தலைவர் சுப்பாரெட்டி, தலைமை நிர்வாக அதிகாரி அனில் குமார் சிங்கால், கூடுதல் நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி ஆகியோர் வரவேற்றனர்


இதேபோல, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருமலைக்கு குடும்பத்துடன் வந்த தெலங்கானாமுதல்வர் சந்திரசேகரராவை உயர் தேவஸ்தான அதிகாரிகள் பொன்னாடை போர்த்தி பூச்செண்டு கொடுத்து வரவேற்றனர்.


ஆனால் தமிழக முதல்வர் பழனிசாமி வரும்போது மட்டும் பலமுறை தேவஸ்தான அதிகாரிகள் அவரை வரவேற்பதற்கு பதிலாக, தேவஸ்தானத்தில் பணியாற்றும் சாதாரண அதிகாரிகளே வரவேற்று தரிசனம் செய்வித்து அனுப்பி வைத்து விடுகின்றனர்.


திருமலைக்கு 60 சதவீதம் பக்தர்கள் தமிழகத்திலிருந்து தான் வருகின்றனர் என தேவஸ்தானம் தனது இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளது. மேலும், திருப்பதி ஏழுமலையான் கோயில் தமிழ் மன்னரால் முதன் முதலில் கட்டப்பட்டது என கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.


பல ஆண்டுகள் வரை சேரர்,சோழர், பல்லவர், ஆற்காடு நவாப்புகள் என பல தமிழர்கள் இக்கோயிலை ஆண்டு வந்துள்ளனர்.


ஆயினும், தமிழக பக்தர்கள் மிகுந்த பக்தியுடன் தங்களது குலதெய்வமாகக் கருதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்து வருகின்றனர்.


திருமலையில் இன்றும்கூட மார்கழி மாதத்தில் சுப்ரபாதத்திற்கு பதில் ஆண்டாள் அருளிய திருப்பாவையே பாடப்படுகிறது. ஆழ்வார்கள் அருளிய நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் தினந்தோறும் ஜீயர்களால் பாடப்படுகிறது.


12ஆழ்வார்கள் போற்றிப் புகழ்ந்த திருமலையில் 17.11.2020 தமிழர்கள் மட்டுமின்றி தமிழக முதல்வர் கூட அலட்சியப் படுத்தப்படுகிறார் என தமிழக பக்தர்கள் கருதுகின்றனர்.


இதுகுறித்து அறங்காவலர் குழு உறுப்பினர் சேகர் ரெட்டியிடம் கேட்டபோது, இதுகுறித்து விசாரிப்பதாக பதிலளித்தார்.


மற்றொரு அறங்காவலர் குழு உறுப்பினர் எம்எல்ஏ குமரகுரு விடம் கேட்டதற்கு "நானும் இதுகுறித்து விசாரிக்கிறேன்" எனக்கூறினார். மற்ற மாநில முதல்வருக்கு வழங்கப்படும் மரியாதையை ஏன் தமிழக முதல்வருக்கு மட்டும் வழங்குவதில்லை? ஏன் இந்த ஓரவஞ்சனை? என தமிழக மக்கள் மத்தியில் கேள்வி எழுந் துள்ளது.